Thursday, December 1, 2016

"பர்வதமலை கிரிவலம்": 16-12-16......




"பர்வதமலை கிரிவலம்": 16-12-16......

இராவணனுக்கு எதிரான போரில் பிரம்மாஸ்திரத்தால் மயங்கிச் சரிந்த லட்சுமணனை காப்பாற்ற, இமயத்திலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிவந்தபோது, அதிலிருந்து வீழ்ந்த சிறு பகுதியே இந்த பர்வதமலை..

ஈசன் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம்.அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்தாராம்...

அடிக்கொரு லிங்கம்"திருவண்ணாமலை", பிடிக்கொரு லிங்கம் "பர்வதமலை" என்று சொல்வழக்கு உண்டாம். தென்கயிலாயம் என்ற பெயரும் உண்டாம். காஞ்சி பெரியவர் ஒருமுறை பர்வதமலையைக் காண வந்தபோது இம்மலையைத் தரிசித்து மெய்சிலிர்த்து, சிவமே மலையாக இருக்கிறதென, மலையேறாமல், அம்மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வணங்கிச் சென்றாராம். திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்போல் இங்கும் பௌர்ணமி கிரிவலம் பிரசித்தமானது. ஞான மார்க்கத்தில் செல்ல விரும்புபவர்கள் அமாவாசையன்று பர்வதமலை வருவார்கள் ,. லோகாதய வாழ்வில் சிறக்க பௌர்ணமியன்று வருவார்கள் .வாருங்கள் பிடிக்கொரு லிங்கம் உறையும் பர்வதமலை செல்ஓம்......

பர்வதமலை என்பது நம் பரமன் ஈசன் உறையும் மலை. பர்வத மலை கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார்ஜுனரும் அம்பிகை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை.இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது நல்லது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ளது ஸ்ரீ பர்வதமலை. பழமை வாய்ந்த இம்மலையை , 

காஞ்சி மகா பெரியவர், கடந்த 1944ம் ஆண்டு, மார்கழி முதல் நாள், கிரிவலம் செய்தார்.பர்வதமலை முழுவதுமே அவருக்கு ஈசனாக தெரிந்ததாம்.அடியவர்களிடமும் பர்வதமலை சாட்சாத் அந்த பரமேஸ்வரனே,என்று கூறி மலை மேல் மிதிக்காமல் , 

பர்வதமலையை கிரிவலம் செய்தார்.அதுவும் பர்வதமலையை மார்கழி முதல் நாளில் கிரிவலம் வருவது அந்த ஈசனையே வலம் வருவது போன்றது .நம் தேவைகள் அனைத்தையும் அப்போது நாம் ஈசனிடம் வேண்டி பெறலாம் என்றார் காஞ்சி மஹா பெரியவா .அன்று முதல் இன்று வரை அடியவர்கள் மார்கழி முதல் நாள் பர்வதமலையை கிரிவலம் வருகிறாகள் .இங்கு திருவண்ணாமலை போல் ஈசனே மலையாக உள்ளார் .எனவே திருவண்ணாமலை போல் இங்கும் கிரிவலம் வரலாம் . ஆனால் மலை மேல் ஏறகூடாது ..

ஆனால் பக்தர்கள் ஆர்வ மிகுதியால் மீறி சென்று விடுகின்டனர். திருவண்ணாமலையில் கூட கார்த்திகை தீப நாள் அன்று மட்டும் தான் மலை ஏற முடியும் .. பிற நாட்களில் மலை ஏறகூடாது . அது பெரும் பாவம் .

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாள் அன்று மலை ஏறியவர்கள் அனைவரும் கார்த்திகை தீபம் முடிந்து 12ம் நாளில் திருவண்ணாமலை ஆலயத்தில் நடை பெறும் பரிகார பூஜையில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் .ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. தமிழிலக்கிய நூல்களில் ஒன்றான  மலைபடுகடாமில் , கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கோலோச்சிய மன்னர்களில் ஒருவனான நன்னன், பர்வதமலை வந்து சிவனை தரிசித்துச் சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.வரும் மார்கழி முதல் நாள் 16.12.16  அன்று பர்வதமலை கிரிவலம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதற்காக "போளூர் சங்கர மடம்" பணியை துவக்கியுள்ளது. பர்வதமலையைச் சுற்றிலும் அழகான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

25 கி.மீ., தூரம் கொண்ட இந்த கிரிவலத்தை, கடலாடி ஸ்ரீ விஷ்ணு  கோவிலில் இருந்து துவக்க, பர்வதமலை கிரிவல பக்தர்கள் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்., வரும் 15-12-16 அன்று இரவுக்குள், 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சன்னிதி தெரு, சங்கர மடம் வேத பாடசாலைக்கு வந்து சேரும் பக்தர்களுக்கு, தேவையான உதவிகளை செய்து தர போளூர் சங்கர மடம் முடிவு செய்து உள்ளது .

இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.நமது காஞ்சி சங்கரமடம் பெரியவர்களின் அருளாசியும் இதற்கு பரிபூரணமாய் உண்டு .கிரிவலம் வரும் அடியவர்களின் உணவு முதலிய ஏற்பாடுகளை பர்வதமலை கிரிவலக்குழு ஏற்பாடு செய்து உள்ளது . அதன்படி, வரும் 16-12-16 அன்று , விடியற்காலை 5.30 மணிக்கு கடலாடியில் துவங்கும் பயணம், சாலை வழியாக மேல்கோடி, பட்டியந்தல்,
விரளூர், ஆதவரம்பாளையம், கேட்டவரம்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக, 25 கி.மீ., நடந்து மறுபடி கடலாடியை வந்து அடையும். இந்த கிரிவலத்தில் பங்கேற்க கடலாடி வரும் அடியவர்கள் , திருவண்ணாமலை, செங்கம் ஆகிய இடங்களில் இருந்தும் வரலாம். போளூர் வர விரும்பும் அடியவர்கள் , சென்னை, காஞ்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து நேரடியாக வரலாம்.

போளூர் சங்கர மடத்தை, 93448 06043,04181 - 222462 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். .
பர்வத மலையடிவாரத்தில் மௌனகுரு ஆசிரமமும் உள்ளது சிறப்பு ....
அன்பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி ,கல்பாக்கம்., 9787443462....




No comments:

Post a Comment