Wednesday, May 25, 2016

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார் ?

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

bala

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 9

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி***

பாலா திரிபுரசுந்தரி என்பவள் யார்? என்ற கேள்விக்கு முதலில் எளியோன் அறிந்தவரை பதிலளிக்க விரும்புகிறேன்!

ஷோடசி மஹாமந்த்ரா எனும் 16 பீஜங்களுடைய மந்திரம் பதினாறு வயதினளாம் திரிபுரசுந்தரி எனும் முப்புர அழகிக்கும், நவாக்ஷரி எனும் 9 பீஜ மந்திரம் அழகிய வாலை எனும் பாலா திரிபுரசுந்தரிக்கும் உறியது ஆகும். அப்படியானால் அம்பிகையின் வயதுக்கு ஒரு பீஜமோ!

தச மஹாவித்யை தேவியர்கள் 1. காலீ(ளீ) 2. தாராதேவி, 3. திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி தேவி, 4. புவனேஸ்வரி தேவி, 5. பைரவி தேவி, 6. சின்னமாஸ்தா தேவி, 7. தூமவதி தேவி, 8.பகளாமுகி தேவி, 9. மாதங்கி தேவி மற்றும் 10. கமலா தேவி என க்ரந்தங்கள் விளக்குகின்றன!

இவற்றில் மூன்றாவதாக குறிப்பிட்ட திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி, ஆதி-பரா-சக்தி, மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீ லலிதாம்பா, ராஜராஜேஸ்வரிதேவி, மற்றும் தந்த்ர பார்வதிதேவி எனவும் அறியப்படுகிறது.

குஹ்ய-அதிகுஹ்ய தந்திரம் எனும் நூலில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மூலாதாரமே இந்த தச மஹா வித்யை தேவியர் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஷோடஸியாக 16 வயதினளாகவும், 16 பீஜங்கள் கொண்ட மந்திரத்தின் ஸ்வரூபமாகவும், 16 குணமுடையவளாகவும் விளக்கப்படுகிறது.  இந்த தேவியை ஆராதிக்கும் முறைக்கே ஸ்ரீவித்யா எனவும், ஆராதிப்பவர் சிவனாக மட்டுமே இருக்கமுடியும் என்றும், அதுவே அம்மனிதரின் கடைசி பிறப்பாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி ஒரு க்ரந்தத்தில், காமாட்சி அம்மனே சுகுணாத்மிக த்ரிசக்தியாக அவதரித்து தனது திருவாயால் ‘க’ என உச்சரித்து தனது இடது கண்ணிலிருந்து ப்ரம்மனையும், ‘ஆ’ என உச்சரித்து வலது கண்ணிலிருந்து விஷ்ணுவையும், ‘ம’ என உச்சரித்து தனது நெற்றிக்கண்ணிலிருந்து மஹாதேவனையும் குழந்தைகளாக உருவாக்கினாள் என்றும், குழந்தை ப்ரம்மனுக்கு “ஷ்ருஷ்டி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை விஷ்ணுவிற்கு “ஸ்திதி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை மஹாதேவனுக்கு “லய வித்யாத்மிக” க்ஷீரத்தையும் புகட்டினாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கண் என்பதையும், காம என்பதையும் சேர்த்து காமாட்சி என அழைத்தனரோ!

இதே க்ரந்தத்தில் கன்யகா பரமேஸ்வரி தேவியான காமாட்சி, திரிபுரசுந்தரியாக அவதரித்து பந்தகாசுரனை கண்டவுடன் கோபம் கொண்டு அஷ்டதஸ புஜ அல்லது 18 கைகளும் சக்ரம் முதலிய ஆயுதங்களும் தரித்து மும்மூர்த்திகள், தேவர்கள் முன்னிலையில் தனது ஒரு காலை அசுரனின் இதயத்திலும், மற்றொரு காலை அசுரனின் களுத்தினிலும் வைத்து அவனை மிதித்து அவனது தலையை இருகைகளினாலும் பிடித்து க்ஷணத்தில் அவனை அழித்தாள் எனவும், அவனது மகன்கள், உறவுகள் அனைத்தயும் நிர்மூலமாக்கியபின், அசுரனின் உடலை பாலாம்பிகா ரூபத்தில் சர்வாலங்கிருதளாய், இழுத்து வந்தாள் என்கிறது.

இன்னொரு க்ரந்தத்திலோ, அன்னையை நோக்கி பல ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் செய்தபொழுது, ஹோம அக்னியிலிருந்து பாலா ரூபத்தில் “ஆதிபரை” தர்சனம் கொடுத்து, என்ன வரம் வேண்டும் என கேட்க, ரிஷிகளானவர்கள், அம்பிகையை பலவாரு துதித்து, எங்களுக்கு சம்பூரண அஷ்ட மஹா சித்திகளை அருளவேண்டும் என்றும், அம்பிகையே உன்னை இந்த ரூபத்தில் வழிபடும் யாவர்க்கும் அவர் அவர் கோரியதை அனுக்ரஹிக்க வேண்டும் என வேண்டினராம். “அவ்வாரே” என்று அம்பிகை அருளினாளாம்!

லலிதா ரஹஸ்ய சஹஸ்ரமோ, தனது 965 வது நாமத்தில் “பாலா” எனவும், தனது 966 வது நாமத்தில் லீலாவினோதினி எனவும் பரப்ரம்ம ஸ்வரூபிணியை குழந்தையாக சொல்கிறது. இதன் 74 ஆவது வரியில், பண்டாசுரனின் 30 மகன்களையும் பாலாம்பிகா அழித்தாள் (பண்டபுத்ர வதோத்யுக்தா பாலா விக்ரம நந்திதா) என தெரிவிக்கிறது

 இன்னும் பல க்ரந்தங்களில் பாலாம்பிகை வ்ருத்தங்கள் உளது.

இங்கு காரணமாகவே க்ரந்தங்களின் பெயர் வெளியிடவில்லை. இவை எல்லம் விட ஒரு முக்கிய விஷயம் நினைவில் நிற்க!

அன்னை பாலாம்பிகையின் மந்திர சித்தி இல்லாமல், ஸ்ரீ சக்ர உபாஸனை செய்யக்கூடாது என்பது விதியாகும்.

அம்பிகை பாலாவின் மந்திரங்கள் எப்படி வின்யாசம் செய்யப்பட்டுள்ளது க்ரந்தங்களில் என்றும், அந்த மந்திரங்களின் மகிமைகளையும் அம்பிகையின் ஆராதனை முறைகளையும் அடுத்தபதிவில்.



|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்***

இவ்வெளியோன் அறிந்தவரையில் இந்த மந்திரம் மிக பலமானது மிக சுகமானது! இதை இவ்வெளியோனுக்கு தங்கவண்ண கும்பமுனி பலகாலங்களுக்கு முன் கருணையுற்று அருளியதாகும். இதன் பயனோ என்னவோ ஆதிபரையின் பேருளால் பல பல நன்மைகள் இவ்வெளியோனுக்கு சித்தித்தது. இதை அவர்தம் பொற்பாதம் பணிந்து, அவர் அனுமதியின் காண் இங்கு வெளியிடுகிறேன் அனுஷ்டித்து நலம் பெருவீரே!

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ: ஆகச்ச ஆகச்ச பாலே, புவனே, பரமேஸ்வரி, பஞ்சாக்ஷரி, ஆனந்தரூபி நம: / ஸ்வாஹ: ||”

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ:” இது மந்த்ரமஹார்ணவாவிலும், மந்த்ர மஹோததியிலும் காணக்கிட்டும் பாலா மந்திரமாகும்.

“ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: சௌ: க்லீம் ஐம் சௌ” இப்படி ஒரு மந்த்ர ஸம்புடீகரணத்தை க்ரந்தங்களில் எளியோன் காணவில்லை!

“ஆகச்ச ஆகச்ச” என்றால் வருக வருக (இதய கமலத்தில் அமர்க)

“பாலே” எனும்பொழுது, பாலாம்பிகை தேவியையும்,

“புவனே” எனும்பொழுது, த்ரிபுவன அரசியாம் திரிபுரசுந்தரியையும்,

“பரமேஸ்வரி” எனும்பொழுது ஆதிபரையையும்,

“பஞ்சாட்சரி” எனும்பொழுது தந்த்ர பார்வதியாம் ஆதிசக்தியையும்,

“ஆனந்தரூபி” எனும்பொழுது ஸ்ரீ லலிதாம்பிகையும் குறிக்கிறது.

உருவிடும்பொழுது நம: என்றும், ஹோமிக்கும்போது ஸ்வாஹ: என்றும் சொல்லவும்.

ஆக ஓரே மந்திரத்தின் மூலம் அம்பிகையின் எல்லா ஸ்வரூபங்களையும் சித்தித்து கொள்கிறோம் அல்லவா! கும்பமுனியின் கருணைக்கு அளவேது! (கும்பமுனி – அகத்தியர்)

இம்மந்திரத்தை தேகசுத்தியுடன், செம்பட்டுடுத்தி, நீரு பூண்டு காலையும் மாலையும் தீபமேற்றி, கிழக்கு முகமாக அமர்ந்து 1008 முறை உருவிட, பின்னர், பாலும், கல்கண்டு, பேரீச்சம்பழம் நிவேதனம் செய்து நிவேதித்த. ப்ரசாதத்தை உட்கொள்ள. சித்தியாகும் வரை நிஷ்டையுடன் அனுஷ்டிக்க.

இந்த வழிபாட்டுக்கு தேவையான மாத்ருகா ந்யாசம்,யந்திரம்யந்திர பூஜா, ஆவரண பூஜா விதானமும்,விரிவான வழிபாடு, புரஸ்சரண விதியும், முறையும்தொடர்புகொள்பவர்க்குவழங்கப்படும் என்பதைபணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்


“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 11

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2***

பரமேஸ்வரன், பரமேஸ்வரியுடன் தனிமையிலிருக்கையில், பரமேஸ்வரிக்கு கீழ்க்கண்டவண்ணம் அருள்கிறார்.

இப்பொழுது ஸ்ரீ பாலா வித்யை பற்றி சொல்கிறேன்! இந்த மந்திரத்தை ஸேவை செய்யும் உபாஸகன், வித்யையில் ப்ரஹஸ்பதிக்கு சமமானவாகவும், தன சம்பத்தில் குபேரனுக்கு சமமானவனாகவும் ஆகிறான்!

இந்த மந்திரமானது “ஐம் க்லீம் சௌ:” எனும் முப்பீஜ மந்திரமாகும். இதற்கு பராசக்தி தேவியின் சாபம் மற்றும் கீலனம் உளது. அதுகாண் இது சித்தியாகாது. இதை சாபோத்தாரணம் மற்றும் உத்கீலனம் செய்தே உபயோகிக்கவேண்டும்.

இப்பொழுது சாப விமோசனா மந்திரத்தை விவரிக்கிறேன்!

“ஐம் ஐம் சௌ: க்லீம் க்லீம் ஐம் சௌ: சௌ: க்லீம்”. இது ஒன்பது பீஜங்களை கொண்டது ஆகும், இதை 108 முறை உச்சரிக்க, பாலா திரிபுரசுந்தரி மந்திரம் சாப விமோசனம் அடைகிறது.

இனி உத்கீலனா மந்திரத்தை கவனிப்போம்! “ஓம் க்லீம் நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க, மந்திரம் உத்கீலனமாகிறது.

சாபம் மற்றும் கீலனத்தால் ப்ரகாஸமிழந்த மந்திரத்தை ப்ரகாசிக்க செய்யவேண்டிய தீபான மந்திரமும் விதியும் உபதேஸிக்கிறேன்.

“ஐம்” எனும் பீஜத்தை ப்ரகாஸிக்க “வத வத வாக்வாதினி ஐம்” எனும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.

“க்லின்னே க்லேதினி மஹாக்ஷோபம் குரு” எனும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து “க்லீம்” எனும் காமராஜ பீஜத்தை தீபானம் செய்யவும்.

“ஓம் மோக்ஷம் குரு” என 108 முறை ஜெபித்து “சௌ:” எனும் பீஜத்தை ப்ரகாசிக்க செய்யவும்.

இப்படியாக சாப மோக்ஷம், உத்கீலனம் தீபானம் செய்தபின் புரஸ்சரணம் செய்துகொள்ளவும்

அடுத்த பதிவில் வினியோகம், ந்யாசங்கள், த்யானங்கள் இத்யாதி!


***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 3***

*** வாலை வணக்கம்***

முப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும், ஸ்ரீ பாலாதேவிக்குமுள்ள
அபேதம் கூறப்படுகின்றது:-

1.ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்
       
உந்தனித யத்திலுயர
   
இந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென
       
இருபுருவ நடுவில்வளர
   
சந்திரனின் பாலொளிச் சௌமியத் தண்சுடர்
       
சுந்தரிநின் சிரசில்விரிய
   
வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு
       
வாலைதிரி புரையழகியே!

ஐந்தரி – அழகுற்றவள், முந்துரவி – உதயசூரியன்; இந்திரவில் – வானவில்; சௌமிய – சாந்தமான.
ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியின் மந்த்ர மஹிமை இம்முதற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. உதய சூரியனின் சிவந்த காந்தியோடு அநாஹத பத்மம் எனும்ஹ்ருதயத்தில் “ ஐம் ” என்ற ஒலி வடிவத்தோடும், நெற்றி நடுவில் இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஜ்ஞா சக்ரத்தில் பல வண்ணங்களோடு தோன்றும் வானவில்லின் ஒளியோடு “ க்லீம் ” என்ற ஒலி வடிவத்தோடும்,த்வாதசாந்த பத்மம் என்கின்ற சிரஸின் உச்சியில் சந்திரிகையின் வெண்மையான தேஜஸை பரவச்செய்யும் “ ஸௌ” என்ற ஒலி வடிவத்தோடும் கூடிய த்ர்யக்ஷரி மந்த்ரமாகும் மூன்று பீஜங்களின் வடிவாக விளங்குகின்ற ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரி தேவியே நீ அருள்புரிவாயாக.

[கோடி சூரியனின் அருணப் பிரகாசத்தோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையில் வாக்பவ பீஜமாகின்ற முதல் பீஜமும், அநாஹதம் முதல் ஆஜ்ஞை வரையில் வானவில்லையொத்த பல வர்ணங்களோடு கூடிய காமராஜ பீஜமாகின்ற இரண்டாவது பீஜமும்,ஆஜ்ஞையிலிருந்து ஸஹஸ்ராரம் வரையில் பூர்ணசந்திரனின் வெண்காந்தியோடு கூடிய சக்தி பீஜமாகின்ற மூன்றாவது பீஜமும் வ்யாபித்துவிளங்குகிறது என்பதும் இப்பாவின் கருத்தாகும்.]

****

அஷ்டகோண யந்த்ரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாதேவியிடம் வரமருள விண்ணப்பம்:-

2.அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை
       
ஆதிபரைகோணமொன்றின்
   
நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக
       
நங்கைசிவ மங்கைபரையே
   
மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்
       
மங்கலை சிவானந்தியே
   
இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு
       
வாலைதிரி புரையழகியே!

அட்டவிதழ் முளரி – எட்டு இதழ்கள் உள்ள தாமரை; எண்கோண வலயம் – அஷ்டகோண சக்கரம்; ஆதிபரைகோணம் – ஒற்றைக் கோணம் கீழ் நோக்கியுள்ள சக்தி முக்கோணம்; யோக நங்கை – யோகினி; மட்டு – தேன்; அவிழ் – சிந்துகின்ற; கந்தமிகு – மணமுற்ற, இட்டமுடன் – விருப்பமுடன், சிட்டருக்கெளிய – அடியார்களால் எளிதில் அடையப்பெறும்.

இப்பாவில் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் யந்த்ரம் கூறப்பட்டிருப்பதோடு, அடியார்களால் எளிதில் அடையப்பெறும் பாலாதேவி நாட்டமோடு அருள் பாலிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.

****

சோணகமலாசனையான ஸ்ரீ பாலாதேவியின் வர்ணனை:-

 3.மேனியிற்செவ்வாடை வேணியிலிளந்திங்கள்
       
பானுவின்செக்கர்வண்ணம்
   
மோனநகையுலவுசம் மோகனமுகத்திலகு
       
ஞானநயனங்கள்மூன்றும்
   
பாணிநான்கில்அக்க மாலைஏடும்அபய
       
தானகுறிகளுமணிந்த
   
சோணகமலாசனையை பேணினேன்மனதில்திரு
       
வாலைதிரிபுரையழகியே!

பாணி – கரம்; அக்கமாலை – ஸ்படிகாக்ஷமாலை; குறி – முத்திரை; சோணகமலாசனை – செந்தாமரையில் வீற்றிருப்பவள்.

சிவந்த ஆடையை அணிந்து, பிறைச்சந்திரனை முடியிற்சூடி, உதிக்கின்ற சூரியனின் அருணகிரணத்தை வீசுகின்ற உடலழகோடு மூன்றுகண்களும்,ஸ்படிகமாலை, புஸ்தகம், அபய, வர முத்திரைகளைத்தரித்த நான்கு கைகளோடும்கூடிசெந்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியை த்யானிக்கின்றேன்.

****

ஆதி அந்தமிலா ஜ்யோதிர்மயியும், அருணப்ரபை வீசுகின்ற
சிவயோகினியுமான ஸ்ரீ பாலாம்பிகை:-

4.நூதனைநலந்தருச னாதனிபுரந்தரைநி
       
ராமயிபுராரிமெய்யின்
   
பாதிபரசாம்பவிப வானிசிவயோகினிவி
       
நோதினிநிதாந்தகலிகை
   
சோதிமயிசெங்கதிர்க் கோதைபரதேவியாம்
       
ஆதியந்தமிலிவிமலை
   
தீதறுபராபரை வேதமாமுதல்விதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

நூதனி – என்றும் புதியதானவள்: புரந்தரை – கங்கை; நிராமயி – வாதனைகளற்றவள்; புராரி – சிவபெருமான்; நிதாந்தகலிகை – மேன்மையான இளம்பூவரும்பு போன்ற குமரிப்பெண்; செங்கதிர்க்கோதை – அருணப்ப்ரகாசம் வீசும் பாலிகை; ஆதியந்தமிலி – முதலும், முடிவுமற்றவள்.

****

பாலையை வணங்குபவர்கட்கு அஷ்டமா சித்திகளும்
எளிதாகக் கைகூடுவது:-

5.மூலபதுமத்திலொரு முகமாய்மனம்கட்டி
       
முழுசிரத்தையொடுநின்னை
   
சீலமாய்ப்பாவிக்கும் யோகசாதகருக்கு
       
சிரசரோசத்தினின்று
   
கோலநின்மலசுகா தீதபியூடமழை
       
கொட்ட, வாய்க்காதுபோமோ
   
சாலசித்திகளெட்டும்? சாலீனையானதிரு
       
வாலைதிரிபுரையழகியே

மூலபதுமம் – மூலாதாரம்; சீலமாய் – நல்லொழுக்கத்தோடு; சிரசரோசம் – ஸஹஸ்ரார கமலம்; நின்மலசுகாதீத பியூடமழை – குறையிலா பேரின்ப அமுதமழை;
சாலீனை – நாணம் மிகுந்த குமரிப்பெண்.

மூலாதாரத்தில் வாசியையடக்கி ஏகாக்ரமான பாவனையுடன் ஸ்ரீபாலாம்பிகையான உன்னை நல்லொழுக்கம் கைவிடாமல் முழுசிரத்தையோடு த்யானம் செய்கின்ற யோகசாதகர்களுக்குக் குண்டலியின் ஏற்றத்தினால் ஸஹஸ்ரார சக்ரத்திலிருந்து குறையற்ற பேரின்பமயமான அம்ருதமழை கொட்டும்போது எங்ஙனம் அஷ்டமாசித்திகளும் கிடைக்கப்பெறாமல் போகும்?

****

மும்மூன்றாக உள்ளவை அனைத்தும் மூவெழுத்து மந்திரத்தின்
பரிணாமமே என்பது:-

6.முப்பாதமுற்றகா யத்திரியுமுத்தீயும்
       
முத்தேவர்முச்சக்தியும்
   
தப்பாதமூன்றுபுரு டார்த்தமும்வருணமும்
       
முக்காலமுந்நாடியும்
   
முப்பாருமுக்குணமுமூவேதமுச்சுரமும்
       
மும்மூன்றெனானவையெலாம்
   
முப்புரைஅநாதீத தற்பரையுன்வடிவுதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

முப்பாதமுற்ற காயத்திரி – மூன்று வரிகளைக்கொண்ட காயத்ரி மந்த்ரம்
முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற மூன்றுவகை அக்நிகள்.
முத்தேவர் – ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரர்.
முச்சக்தி – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.
மூன்று புருடார்த்தங்கள் – அறம், பொருள், இன்பம்.
வருணங்கள் – ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்கள்.
முந்நாடி – இடை, பிங்களை, சுழுமுனை.
முப்பார் – பூமி, ஸ்வர்கம், பாதாளம்.
முக்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ்.
முச்சுரம் – ஓங்காரத்தின் வடிவங்களான அகாரம், உகாரம், மகாரம்.

இவ்வுலகில் எவையெல்லாம் மும்மூன்றாகத்தோற்றமளிக்கின்றனவோ, அவையெல்லாம் அம்பிகையின் ‘த்ரிபுரை’ என்ற பெயரை அனுசரித்தே விளங்குகின்றன எனும் கருத்தே இப்பாவில் அமைந்திருப்பது.

****

தேவாதிகள் போற்றும் அன்னை தேகாதிகட்குற்ற துன்பங்களை
நீக்கவேண்டும் என்று வேண்டுகோள்:-

7.ஓராதசித்தியொடு மூவாததேசுற்ற
       
யோகாதிவீரர்குழுவும்
   
தேவாதிகளும்முனிவர் ஏகாந்ததவசிகளும்
       
தேடியுனையேத்திமகிழ்வார்
   
தேகாதிகட்குற்ற தீராதவாதனைகள்
       
தானாயுடைந்துபொடிய
   
வைகாதெனைக்காக்க வருவாய்கனிந்துதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

யோகாப்பியாசத்தால் எண்ணற்ற சித்திகளைப்பெற்று மூப்பு, நரை இல்லாத பொலிவுற்ற சித்தர்குழாமும்,தேவாதி பதினெண்கணங்களும், முனிவர்களும்,ஏகாந்தமான நிட்டையில் ஈடுபட்டுள்ள குருமார்களும்உனைத்தேடியடைந்து துதித்து மகிழ்கின்றனர். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படக்கூடிய தீராத வாதனைகளும் தானாகவே அழிந்துவிலகிப்போகும்வண்ணம், சற்றும் தாமதம்செய்யாது எனைக்காக்க மனம் கனிந்து வருவாயாக.

****

அம்பிகையை த்யானிப்பது ஸர்வமங்களங்களையும் அருளும் என்பது:-

8.ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்
       
அருளொளிருமழகுமுகமும்
   
தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்
       
தெளிவொடுன்னுபவர்வாழ்வில்
   
நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி
       
ஞானமும்நலமும்வளரும்
   
ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு
       
வாலைதிரிபுரையழகியே!

ஆயி – அன்னை; மூவெழுத்து ஆதிமந்திரம் – த்ரியக்ஷரி என்ற பாலா மந்த்ரம்; நிட்களை – எங்கும் நிரம்பியிருப்பதால் கூறுபடாதவள்; உன்னுதல் – த்யானித்தல்.

****

(நன்றி: உ.இரா.கிரிதரன்.)

Part 11 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2 , Part 10, Part 9, Part 8, Part 7, Part 6, Part 5, Part 4, Part 3, Part 2, Part 1. தஸ மஹாவித்யா, ஸான்னித்ய ஸ்தவம்,

No comments:

Post a Comment