Monday, December 15, 2014

சிவாச்சார்யார் - ஜெயபாரதி [ SIVACHARYARS ]

அன்பர்களே,

ரொம்ப நாட்களுக்கு முன்னர் ·போரம்ஹப் என்னும் வலைத்தளத்தில் எழுதப்பட்ட உரையாடல். 'சிவாச்சார்யார்கள்' பற்றியது.

இதில் நான் எழுதியிருக்கும் விபரங்களுக்குப் பின்னணியாக உள்ளவை சில நூல்கள் - சைவ ஆகமங்களைப் பற்றியவை. முக்கியமாக டாக்டர் ஏவி ஜெயசத்திரன் எழுதிய மீனாட்சியம்மன் கோயில் பற்றிய பிஎச்டீ ஆய்வு தீஸிஸ். 

தமிழில் எளிமைப் படுத்தி எழுதியுள்ளேன்.
கோயிலில் தெய்வங்களுக்குரிய காரியங்களைச் செய்பவர்களை "தேவகன்மிகள்" என்று சொல்வார்கள்.  எல்லோரும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, எல்லோரும் "பிரம்மாணர்" என்று முடிவு கட்டிவிடுகிறோம்.

ஆனால் அவர்களில் எல்லோருமே சிவ ஆலயங்களில் 
தெய்வங்களுக்குரிய  எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது.

அவர்களில் உச்சகட்டத்தில் இருப்போர் "ஆதிசைவர்"  எனப்படுவர். வைதிக பிராம்மணர்கள் "பிரம்மஸ்ரீ" என்று பெயருக்கு முன்னாலும் "சர்மா" என்ற பட்டத்தை பின்னாலும் போட்டுக்கொள்வார்கள்.  இவர்களோ "சிவஸ்ரீ" என்று போட்டுக்கொள்வார்கள். "பட்டர்" என்ற பட்டமுண்டு.

"சிவபிரம்மணர்" என்று பழஞ்சாசனங்களில் இவர்கள் குறிப்பிடப் படுவார்கள். ஆச்சார்ய ஸ்தானமும் இவர்களுக்கு உண்டு. சில குலத்தினருக்கு இவர்கள் சிவதீட்சை செய்து வைப்பார்கள். ஆகவே "தீட்சிதர்" என்ற பட்டமும் பெற்றவர்கள் உண்டு. 

இவர்களில் "ஆச்சாரியர்"  என்ற உச்சப்பிரிவினர் தினப்பூசை, உற்சவம், பிரதிஷ்டை, கழுவாய்(பிராயச்சித்தம்) ஆகியவை செய்தற்கு அதிகாரம் பெற்றவர்கள்.  இவர்களைத்தான் "முப்போதும்  திருமேனி தீண்டுவார்" என்றும் சொல்வார்கள். இவர்கள் ஆகமங்களுகே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் வைதிகர்கள் அல்லர்.

"அர்ச்சகர்" என்போர் தினப்பூசை செய்தற்கு மட்டுமே உரியவர். ஆச்சாரியர் செய்யும் மற்ற தேவகாரியங்களை இவர்கள் செய்யமுடியாது.

"ஸ்தானீகர்" என்போர்  "உற்சவமூர்த்தி"  எனப்படும் வெளிச்சுற்று விக்கிரகங்களுக்கு அலங்காரம் மட்டும் செய்யலாம். மூல லிங்கத்தைத் 
தொடக்கூடாது. 

"பாசகர்" என்போர் நைவேத்தியங்களைச் செய்வர்.

"பரிசாரகர்" என்போர் பூஜைக்குரிய பொருள்களைச் சித்தம் செய்வர்.

அன்புடன்

ஜெயபாரதி
mail : Agathiyar date: Fri, Dec 5, 2014 at 5:48 AM

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete