Tuesday, December 23, 2014

அகத்தியரை "நாடியில்" ...

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை "நாடியில்" நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் நம்மிடை உண்டு. அவர் சொல்கிற எத்தனையோ பரிகாரங்களை செய்தும், நாம் எதிர்பார்ப்பது நடக்க தாமதமாகலாம். வருத்தப் படுவது வேண்டாம். அகத்தியப் பெருமானே, ஏன் என்று, அதற்கான காரணங்களை, பல தருணங்களில் விளக்கியுள்ளார். இந்த வாரம், சித்தன் அருளில், அகத்தியரின் பல அறிவுரைகளை உங்களுக்கு வழங்கலாம் என்று எண்ணம்.
அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பலமுறை கூறிய அறிவுரைகளை, என் நண்பர் விவரித்த விஷயங்களை, எளிய முறையில், இங்கு தொகுத்து தந்திருக்கிறேன். அகத்தியப் பெருமான் அருள் தந்தும் ஏன் நடக்கவில்லை என்று நினைத்திருப்பவர்களுக்கும், நம்முள்ளே எழுந்து இன்றுவரை விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு சில கேள்விகளுக்கும், இங்கு கண்டிப்பாக பதில் இருக்கும். அதை சரியாக தரம் பிரித்து பார்த்து, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு அகத்தியர் கூறுகிற பதிலாக எடுத்துக் கொண்டு, அதன்படி நடந்து, பின்னர் அமைதி உங்களுக்குள் தவழ்ந்தால், இவைகள் உங்களுக்கென அகத்தியர் கூறிய பதில் என்று உணர முடியும்.

1 . அகத்தியர் ஒரு சித்தர். அவரை நாடிக் கேட்கும் பொழுது நல்வழி காட்டுவார். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு நல்ல வழி, நல்ல பயன் கிடைக்கிறது. மற்றவர்கள், பொறுமையாக , மறுபடியும், மறுபடியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் அவர்களுக்கும் அருள் புரிவார். இங்கு நம் கடமை என்பது, பரிகாரங்களை செய்வதோடு மட்டும் அல்லாமல், பொறுமையாக, நிறைய நல்ல விஷயங்களை நம்பிக்கையோடு செய்து கொண்டிருக்க வேண்டும். மனம் தளரக்கூடாது. கண்டிப்பாக நல்லது நடக்கும்.

2 . பொதுவாக அகத்தியர் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாக்கு கொடுப்பதில்லை. சோதனைகளை உண்டாக்கி, "உண்மையில் அவன்/அவள் நம்பிக்கையோடு வந்திருக்கிறார்களா? இல்லை சுயநலத்திற்காக வந்து கேட்கிறார்களா என்பதை அறிந்த பின்னர்தான், தனது தவவலிமையை கொண்டு, வியத்தகு காரியங்களை செய்து காட்டுவார். ஆகவே, கேட்பதில், நாம்தான் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். கேட்பது, நிலைத்து நிற்கும் விஷயங்களாக இருந்தால். நிச்சயமாக கிடைக்கும்.

3 . அகத்தியர் வாக்கு சில சமயம் பொய்த்துவிட்டது போல் தோன்றும். ஆனால், சரியான நேரத்தில் அது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் பிரம்மாண்டமாக வெளியே வரும். இது தான் உண்மை.

4 . "காரணமில்லாமல் பொறுத்திரு என்று அகத்தியன் கூற மாட்டேன். இது அவசரமான உலகம். பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறார்கள். கலியுகம் என்பதால் அப்படி நடக்கவும் செய்கிறது. எப்போதைக்கு எப்போது எவன் ஒருவன் அகத்தியனிடம் முழு நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்கிறானோ அவனை நானே கைபிடித்து தூக்கி அழைத்துச் செல்வேன். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி பொருட்படுத்தவே மாட்டேன். ஏனெனில், என்னை நம்பி வருபவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவிதத் துன்பமும் வரக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை பிரம்மாவிடம் கேட்டு பிரம்மாவின் அனுமதியோடு அவர்களுக்கு நல்லது செய்வேன். இதற்கு சில காலம் ஆகலாம். பலருக்கு பிரம்மா இரக்கப்படாமல் கூடப் போகலாம். பிரம்மா மறுத்துவிட்டால், அதை நான் அப்படியே என் பக்தர்களுக்கு சட்டென்று நான் சொல்லிவிடமாட்டேன். மீண்டும் பிரம்மாவின் மனதை சாந்தப்படுத்த முயற்ச்சிப்பேன். எனது வேண்டுகோளை பிரம்மா உடனடியாக ஏற்றுவிட்டால் என் பக்தர்களுக்கு உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பேன். இது நடக்கும், நடக்காது என்று வெட்டு ஒன்று துன்று ரெண்டாக சொல்லும் பழக்கம் அகத்தியனுக்கு இல்லை, அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் நூற்றுக்கு ஒருவர், இருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்தக் காரியமும் நடக்காது. "பொறுத்திரு" என்று சொன்னால் அவர்களுக்காக அகத்தியன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். பக்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார். சரியாக புரிந்து கொள்வது நமது கடமை, பொறுமை மேலும் நல்லதை செய்யும்.

5 . அனுபவப்பட்ட பின்தான் பலருக்கும் புரிகின்றது - பிரார்த்தனையும், பெரியோர்களின் வழிகாட்டலும்தான் ஒருவரை சோதனையிலிருந்து காப்பாற்றுகிறது என்று. நாம்தான் அவசரக் குடுக்கையாக நடந்து கொள்கிறோம், என்பதே அகத்தியரின் முடிவு.

6 . அகத்தியர் சொன்னால் எல்லாமே நடக்கும் என்பது பொது விதிதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். ஒருவர், இருவர் என்றால் அகத்தியர் உடன் ஓடி வந்து உதவி செய்வார். ஒரு நாளைக்கு 1000 பேர் வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று அகத்தியருக்கும் ஆசைதான். ஆனால் அவருக்கும் எத்தனையோ பிரார்த்தனைகள் இருக்கின்றன. த்யானம் செய்ய வேண்டும். தெய்வம் இடும் கட்டளைகளை/கடமைகளை செய்யவேண்டும். அதற்காக, அவர் பல அவதாரங்கள் எடுத்து எல்லோரையும் நிறைவு செய்ய முடியாது. எனினும் படிப்படியாக ஒவ்வொருவருக்கும் உதவி செய்வார். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என அகத்தியப் பெருமானே பல முறை கூறியுள்ளார்.

7. .அகத்தியப் பெருமான் சொன்ன பரிகாரங்களை செய்துவிட்டு, அடுத்த நாளே பலனை எதிர்பார்ப்பது தவறு. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம புண்ணியத்தால் உடனடியாக பலன் கிடைத்து விடுகிறது. பலருக்கு தாமதம் ஏற்படுகிறது. ஆதலில், பொறுமை, நம்பிக்கை மிக அவசியம்.

8 . குறுக்கு வழியில் பணம் சேர்ப்பவர்கள் எல்லோரும் பின்னொரு காலத்தில் அவல நிலைக்குத்தான் ஆளாக வேண்டிவரும். சிலருக்கு வாரிசு இல்லாமலே போய்விடும். பலருக்கு இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைக்கு நோய்கள் தாக்கும். இவை எல்லாம் உத்தேசித்துத்தான் "பொறுத்திரு சிலகாலம்" என உரைக்கிறார்.

9 . கர்மவினையை அனுபவிக்காமல் யாரும் தப்பிக்க முடியாது. அது இறைவன் இடுகின்ற கட்டளை. 
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அகத்தியர் ஒரு வழிகாட்டி. சிலவற்றை நேரடியாகவும் பலவற்றை மறைமுகமாகவும் சொல்வார். பயன்படுத்திக் கொண்டு செயல்படுவது அனைவருக்கும் நல்லது. அகத்தியர் சொன்னது நடக்கவில்லை என்றால் "விதி" இன்னும் இரங்கவில்லை என்று அர்த்தம். இதற்காக அகத்தியரை பழி சொல்வதில் அர்த்தமில்லை. இங்கு நம்செயல் சரி இல்லை, குறைந்த பட்சம், அகத்தியர் வாக்கில் நம்பிக்கை இல்லை, பக்தி இல்லை என்று அர்த்தம். முதலில் அவைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

10 . எல்லோரும் அவரை தேடி வந்து, நாடியில் வாக்கு கேட்பார்கள். ஆனால், முன் ஜென்மத்தில் அகத்தியரை வழிபட்டதால், இந்த ஜென்மத்தில் ஏழ்மையில் பிறந்தும், நாடியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தூக்கிக் கொண்டு போய், அவர்களுக்காக அகத்தியர் நாடியில் வந்து அருள்வாக்கு கொடுத்து, அவர்கள் வாழ்க்கை செம்மையான பல நிகழ்ச்சிகள் உண்டு. அப்படிப்பட்ட புண்ணிய நிலைக்காக, இந்த ஜென்மத்திலேனும் நல்லதை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

11 . வீட்டில் நடத்தப்படும் யாகத்தின் புகை, அந்த வீட்டில் உள்ள குடும்பத்தாரை சுற்றி நின்று காப்பாற்றும். அதனால்தான் அகத்தியர் குறைந்தது, வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், வீட்டில் சாம்பிராணி புகை போடச் சொல்கிறார். அப்படி புகைக்கும் சாம்பிராணியில், சிறிதளவு நெய் சேர்த்துக் கொண்டால், யாகபலன் (பாதுகாப்பு) எளிதில் அனைவருக்கும் கிடைக்கும்.

thank FB friend: Bala Chandran Gunasekaran

                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete