Friday, April 4, 2014

குருவே சரணம்

குருவே சரணம்
  

ஒருவருக்கு வாழ்வில் என்ன கிடைக்கிறதோ இல்லையோ குரு கிடைக்க வேண்டும்.

நம் வாழ்வில் அம்மாவே முதலில் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார். பின் தந்தை. அதன் பின் பள்ளியில் ஆசிரியர்கள் உலகாயத வித்தை கற்றுத்தருவர். நாமே பலரைப்பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இதெல்லாம் லௌகீக சமாசாரங்கள்.

நாம் உலகில் பிறப்பது கர்மாவை தீர்த்து, ஆன்மீகத்தில் முன்னேறவே. அப்படி முன்னேறுவதையே சரியான முன்னேற்றம் என்று சொல்லலாம். நமக்கு ஏற்படும் மற்ற வசதிகள் - நல்ல வேலை, பணம் காசு, வீடு என்றெல்லாம் அமைவது இந்த முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கவே. இது ஏணிதான். ஏணியிலேயே யாரும் உட்கார்ந்து கொள்வார்களா என்ன? அதன் உதவியுடன் மேலே போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டும். அது போல கிடைக்கும் இந்த வசதிகளை அனுபவிப்பதிலேயே நம் வாழ்க்கையை கழித்து விடக்கூடாது. ஆன்மீக நிலையில் மேலே போக பார்க்க வேண்டும்.
இந்த பயணத்தில் வேதங்களையோ, சாத்திரங்களையோ, அல்லது நாம் நடந்து கொள்ள வேன்டிய முறைகளையோ சொல்லித்தருபவர் ஆசான், ஆசார்யன். அதன் படி நாம் நடந்து வரும் போது சில சமயம் சரியான நேரத்திற்கு ஒரு வழி காட்டி வந்து இப்படி போ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அத்துடன் அவர் வேலை முடியும். இவர் வழிகாட்டி, மார்க்க தர்சி. ஆனால் கடைசியாக கூடவே இருந்து முக்திக்கு வழி காட்டுபவரே உண்மையான குரு.

எல்லோருக்கும் ஒவ்வொரு குரு இருப்பார். அவரை கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையானால் ஆன்மீக முன்னேற்றத்தை அதிகம் பெற இயலாது. திருப்பித் திருப்பி பிறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். குரு அருள் பெறாதவர்களுக்கு அவர் உலகின் மறு கோடியில் இருப்பார் என்பார்கள். அந்த மறு கோடி எது? உலகை ஒரு சுற்று சுற்றினால் அடைவது நம் முதுகு பக்கத்தைதான் என்றார் விஷயம் தெரிந்த ஒரு குழந்தை! அதாவது நம் பார்வை அவரை விட்டு எதிர் திசையில் போய் விடுகிறது! ஆனால் அவரோ நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார். சினிமா போல கவர்ச்சியான இந்த உலக வாழ்க்கையிலேயே உழன்று கொண்டு இருந்தால் குரு கவலையுடன் பார்த்துக்கொண்டு இருப்பார். எப்போது அதை விட்டு ஆன்மீகம், இறைவன், குரு என்று பார்வையை திருப்புகிறோமோ அப்போது சந்தோஷமாக நமக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிடுவார். அவரிடம் முழுக்க சரண் அடைந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்; அப்புறம் பிரச்சினையே இல்லை. நமக்கு வேண்டியதை அவரே பார்த்துக்கொள்வார். ஆனால் இந்த பூரண சரணாகதி என்பதுதான் ரொம்பவே கஷ்டம்!

அது வரை அவர் சொல்லுகிற வேலைகளை முழு முயற்சியுடன் செய்து வர வேண்டும். அது நம் புத்திக்கு என்னதான் 'சில்லி' யாக தோன்றினாலும், என்னதான் முடியவே முடியாது என்று தோன்றினாலும்! நாம் கடை தேர ஒரே நிச்சய வழி இதுவே!........


நன்றி!

அடியேன்...

https://anmikam4dumbme.blogspot.com/2012/11/blog-post_16.html


No comments:

Post a Comment