Sunday, November 4, 2012

சும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா ?


சும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா?

                                                                                             
   
-முனைவர். மா. தியாகராஜன்.



நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பயன்படுத்தும் ஒரு சொல் ‘சும்மா’ என்பதாகும். இது பற்றி ஒரு சிறு விளக்கம்!

"சும்மா இருப்பதே சுகம்!" இச்சொல் "திருமந்திரம்" என்ற நூலில், திருமூலரால் எடுத்தாளப்படுகிறது. "சும்மா" என்பதற்கு "அமைதியாய் இருப்பதே சுகம்" என்று பொருள். ஞானிகள், முனிவர்கள், தவசிகள் தங்கள் வாழ்வைத் துறந்து அமைதியாய் ஓரிடத்தில் தவம் செய்வதையே இச்சொல் குறிப்பதாக அமைந்தது.

வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் குழந்தையிடம், அம்மா, "சும்மா நிற்காதே; எனக்கு உதவிசெய்!" என்பாள். இதில் வரும் "சும்மா" என்ற சொல்லுக்கு "வேலை ஒன்றும் செய்யாமல், நிற்காதே" என்று பொருள்.

சில இடங்களில் நல்ல மாமரமோ, தென்னை மரமோ வளர்ந்திருப்பதைக் காணலாம். அப்பொழுது ஒருவர் "யாரும் தண்ணீர் ஊற்றாமல் இம்மரம் சும்மா வளர்ந்திருக்கிறதே!" என்று கூறுவார். இவ்விடத்தில் "சும்மா" என்பதற்கு, எவ்வித உதவியும் இன்றித் தன்னந்தானே இயற்கையாக வளர்கிறது" என்று பொருள்.

"என் அன்னையின் நினைவு "சும்மா சும்மா" வந்து என்னை வாட்டியது” என்கிறார் ஒருவர். இதில் வரும் “சும்மா சும்மா” என்பதற்கு “அடிக்கடி” என்று பொருள்.

”சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி” என்ற பாடல். கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் எழுதியதாகும். இதில் வரும் “சும்மா” என்பதற்குத் “தரிசாக- விளைச்சல் இல்லாமல்” என்று பொருள்.

புவியரசன் சோற்றைச் சும்மா சாப்பிட்டான்”. சோறு உண்ணும் பொழுது நமக்கு வேண்டிய காய்கறிகள். கறிவகைகளை வைத்துக் கொண்டு உண்போம். இவனுக்கு மிகுந்த பசியாக இருந்ததனால் மற்ற கறிகளைச் சேர்த்துக் கொள்ளாமல் வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான். ஆதலால் இங்கு வரும் “சும்மா” என்ற சொல் வெறும் சோற்றை மட்டும் உண்டான் என்பதைக் குறித்து நின்றது.

வீட்டில் சிறு பிள்ளைகள் குளித்து விட்டு, ஆடையின்றிக் காட்சியளிப்பார்கள். அதை நாம், குழந்தை “சும்மா நிற்கிறது” என்று சொல்வோம். இங்குக் குறிக்கப்படும் “சும்மா” என்பதற்கு ஆடையணி எதுவுமில்லாமல் நிர்வாணமாக நிற்கிறது என்பதே பொருளாகும்.
நான் உன்னைக் கொன்று விடுவேன்’’ என முல்லையிடம் “சும்மா” சொன்னதை அவள் தவறாக நினைத்து விட்டாள்!’’ இதில் வரும் “சும்மா” என்பதற்கு “விளையாட்டாக ஒரு பேச்சுக்குச் சொன்னதை” என்று பொருள் கொள்ள வேண்டும்.

சிலர், விலையுயர்ந்த ஆடைகளையும், அழகான ஆடைகளையும் அணிவது அணிவது இயற்கை. அப்படி அணியும் ஒருவனைப் பார்த்து “உன் ஆடை அழகாக இருக்கிறதே! எப்போது தைத்தாய்?’’ என்று கேட்டால்“சும்மா இருக்கும் போது’’ என்று விடை வரும். இங்கே “சும்மா” என்பதற்கு “ஓய்வாக இருக்கும் போது’’ என்று பொருளாகும்.

அன்பரசன், ‘’தன் குடும்பத்தைச் சீரழித்தவரைச் சும்மா விடப் போவதில்லை’’ என்று கூறினான் இதில் வரும் ‘’சும்மா விடப்போவதில்லை’’ என்பதற்குப் “பழிவாங்காமல் விடுவதில்லை’’ என்பதே பொருளாகும்.

தற்போது அனைத்து வீடுகளிலும் கைப்பேசி உள்ளது. சிலர் எப்பொழுதும் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பர். இதனால் வெளியிலிருந்து வரும் செய்திகள் தடைப்படும். இதனால் அன்னை ஆத்திரமுற்று இவ்வாறு கூறுவார்: “சும்மா வெட்டிப் பேச்சுப் பேசியது போதும் கைப்பேசியைக் கீழேவை. இதில் வரும் “சும்மா” என்பதற்கு “அனாவசியமாக” என்று பொருள்.

நம் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு அருந்துவார்கள், அப்போது நாம்,“சும்மா அருந்துங்கள் இது நம்ம வீடு மாதிரி’’ என்று சொல்வோம், இங்கு வரும் “சும்மா” என்பதற்கு “வெட்கப்படாமல் உண்ணுங்கள்” என்று பொருளாகும்.

Thank:Muthukamalam

Tamil speech about StayIdle [ சும்மா இரு ] by Dr.Dheena Dayalan:

StayIdle [ சும்மா இரு ] Brahmam [2hrs.28m]: https://www.mediafire.com/?xpitr1e4kqd0e8n
StayIdle [ சும்மா இரு ] Q&A [2hrs.33m]: https://www.mediafire.com/?ke4s9fus7ys44rc
Dr Dheena Dayalan his site : https://suthasivam.blogspot.com/




Thanks & Regards

Harimanikandan.V

                 

  ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் நமசிவய‌, யநமசிவ‌சிவயநம‌வயநமசி ,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment