Tuesday, July 26, 2011

சைவ வினாவிடை[Shaivam Q&A] 1. கடவுள் இயல்


 சிவமயம்



1. கடவுள் இயல்


1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? 

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? 

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை? 

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.

4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்? 

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது? 

வல்லமை.

6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்? 

உமாதேவியார்.

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்? 

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது? 


திருகைலாச மலை

9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?


சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.

-ஆறுமுக நாவலர் 1978

No comments:

Post a Comment