Monday, April 25, 2016

கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள் .. !!


Thank to ayya 
கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..!!

இந்த உலகத்தில் பல்வேறு சொற்கள் பல்வேறு உருவங்களில் பல்வேறு நிலைகளில் உலவிக் கொண்டு வருகிறது.
மனிதன் பல்வேறு சொற்களின் அர்த்தங்களை அறிந்தும் - அறியாமலும் பயன்படுத்தி வருகிறான்.
பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.
கடவுளின் பல்வேறு பெயர்கள்:
1. ஆதி
2. பகவன்
3. ஆண்டவன்
4. கடவுள்
5. இறைவன்
6. தெய்வம்
7. அநாதி
8. பிரம்மம்
9. பரம்
10. பூரணம்
இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் முடிந்த அளவு பார்ப்போம்.
══════════════
1. ஆதி
ஆதி என்றால்
முதல் நிலை
மூல நிலை
இருப்பு நிலை
என்று பொருள்.
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,
இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் - ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.

2. பகவன் :
இலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன
இலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள்
பகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள்
பகு + அவன் = பகவன்
அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.
உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள்
அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
══════════════
3. ஆண்டவன் :
ஆண்டு + அவன் = ஆண்டவன்
ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்
ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.
ஆண்டவன் என்றால் விரிந்தவன் எல்லையில்லாதவன் என்று பொருள்.
அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.
ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.
══════════════
4. கடவுள் :
உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி,
உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.
கட + வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.
மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = கடவுள் என்பதாகும்.
5. இறைவன்
இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள்.
அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து - இயக்க நிலை மாறாமல் - இயக்க ஒழுங்கு மாறாமல் - இயக்க விதிப்படி - ஆண்டு கொண்டிருப்பவன் - என்று பொருள்.
══════════════
6.தெய்வம்
உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது
ஒன்று நிகழ்ச்சி நிலை
இரண்டு பொருள் நிலை
1. எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.
2. அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.
உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது.
தேய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.
══════════════
7. அநாதி
அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்
புத்தகம் மேசை மீது இருக்கிறது - மேசை பூமி மீது இருக்கிறது - பூமி வெட்டவெளியில் இருக்கிறது.
புத்தகத்திற்கு மேசை ஆதாரம் - மேசைக்கு பூமி ஆதாரம் - பூமிக்கு வெட்டவெளி ஆதாரம் - வெட்டவெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் - அது அநாதி ஆயிற்று.
அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது.
அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.
கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய் தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
..
8. பிரம்மம் :
பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற பொருள்.
அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.
கடவுள் அழிவில்லாதவர் என்றால் கடவுளைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் அழியக் கூடியது என்று அர்த்தம்.
அதனால் இந்த உலகையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மாயை என்று சொல்லால் குறிப்பிடுகின்றனர். மாயை என்றால் அழியக் கூடியது என்று அர்த்தம்.
══════════════
9. பரம் :
பரம் என்றால் நேர் இல்லாதது, உவமை இல்லாதது, அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது, அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது, என்று பொருள்.
இந்து மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றமடைகிறது.
பரம் + சிவன் = பரமசிவன்
பரம் + சக்தி = பராசக்தி
சிவன் என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலைக்கு மேல் வேறு ஒன்றும் (கடவுள்) இல்லாத காரணத்தினால், பரம் + சிவன் = பரமசிவன், அதாவது பரமசிவனுக்கு மேல் வேறு இருப்பு நிலை (கடவுள்) இல்லை என்று பொருள்.
சக்தி என்றால் இயக்க நிலை என்று பொருள்.
அதாவது இருப்பு நிலை அசைந்து, இயக்க நிலை உருவாகிய அந்த நிலையே முதல் இயக்கநிலை. அதற்கு முன்பு இயக்க நிலை கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + சக்தி =பராசக்தி என்பதாகும்.
கிறிஸ்தவ மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றம் அடைகிறது.
பரம் + பிதா = பரம பிதா
பரம் + மண்டலம் = பர மண்டலம்
பரம் + லோகம் + ராஜ்யம் = பரலோக ராஜ்யம்
பிதா என்றால் தந்தை என்று பொருள்.
குடும்ப அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வருபவர் என்று பொருள்.
உலக அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வரும் பரம பிதாவுக்கு மேல் வேறு யாரும் கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + பிதா = பரம பிதா என்பதாகும்.
══════════════
10. பூரணம் :
இவைகள் - என்று சொற்களில் எடுத்துக் கூற முடியாத,
இவைகள் - என்று வார்த்தைகளில் எழுதிக் காட்ட முடியாத,
அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலம் வரும் பொழுது தானாகவே பரிணமித்து வெளிப்படும்.
அதாவது இன்னதென்று தெரியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் காலம் வரும் பொழுது வெளிப்படும், அதுவே பூரணம் எனப்படும்.
══════════════
பல்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படும் கடவுள் என்ற சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்றால்,
கடவுள் என்றால் என்ன?
கடவுளை அடையக் கூடிய வழிகள் எவை?
என்பன போன்ற அதி சூட்சும கேள்விகளுக்குள் எவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கும்? என்பதைப் பற்றி சிந்திப்போம் தெளிவு பெறுவோம்.
..
நன்றி: பாலாவின் பார்வையில் சித்தர்கள்



2 comments: